மன்னார்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஆறுகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க 1 லட்சம் சாக்குகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் வடக்கு தென்பரை தோணித்துறை பாலம் அருகில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமணி ஆற்று கரை பகுதிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நீர் மேலாண்மையை சரியாக கடைப்பிடித்து வெள்ளம் வராமல் பார்த்துக் கொள்ள பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழை நடப்பாண்டு கூடுதலாக பெய்வதற்கு வாய்ப்புள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் வட கிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு தமிழகம் முழுவதும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் எந்தவிதமான பிரச்னைகள் இல்லாமல் மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உடைப்புகள் ஏற்ப்பட்டால் அதனை சரி செய்வதற்கு 1 லட்சம் காலி சாக்குகள், மணல் நிரப்பிய 16 ஆயிரம் மண் மூட்டைகளும், 430 கன மீட்டர் மணலும், 875 சவுக்கு குச்சிகள், சவுக்கு கட்டைகள் 3990 ரன்னிங் மீட்டர் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் தெய்வநாயகி, பொதுப்பணித் துறை உ தவி செயற்பொறியாளர் சங்கர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.