புளியங்குடி: புளியங்குடி அருகே முயல்வேட்டையாடி உணவு சமைத்து சாப்பிட்ட 4 பேருக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஈச்சம்பொட்டல் பகுதியில் சட்டவிரோதமாக முயல்வேட்டை நடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் புளியங்குடி வன அலுவலர் ஸ்டாலின் தலைமையில் வனவர்கள் உபேந்திரன், யோபுராஜ், செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈச்சம்பொட்டல் பகுதியில் திடீர் சோதனை மேற்ெகாண்டனர்.
அப்போது 4பேர் கொண்ட கும்பல், சட்டவிரோதமாக முயலை வேட்டையாடி உணவு சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து முயல் இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டன. விசாரணையில் அவர்கள், புளியங்குடி பகுதியை சேர்ந்த கோமதிராஜா, காளிராஜ், மாரிமுத்து குருசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கும் வனத்துறை சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.