ஊத்துக்கோட்டை: கீழ்கருமனூர் கண்டிகை பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடந்த புதர், தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே கீழ்கருமனூர் கண்டிகை, கயடை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தம் பயன்பாடில்லாமல் இருந்தது. இதனால் பஸ் நிறுத்தம் முன்பு புதர்கள் மண்டிக்கிடந்தது.
பஸ் ஏற வரும் பயணிகள் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்று அச்சப்பட்டனர். எனவே, கீழ்கருமனூர்கண்டிகை பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் புதர் மண்டிய கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் இருந்த புதர்களை அகற்றி சீரமைத்தனர்.