காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கார் டிரைவர். இவரது மனைவி காமாட்சி. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் காரை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் காமாட்சி தகாத உறவு இருந்தது. இதை பலமுறை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். கேட்கவில்லை. இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன் காமாட்சியும் தினேஷும் மாயமாகினர். பிறகு மீண்டும் வீடு திரும்பினர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி மாலை பணி முடித்து ரவிச்சந்திரன் வீடு திரும்பினார்.
அப்போது, காமாட்சியுடன் தினேஷ் பேசி கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். அங்கு கிடந்த கட்டையால் தினேஷை தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து, உடலை ஜேசிபி எந்திரத்தில் எடுத்து கொண்டு சிறுவாக்கம் ஏரிக்கரையில் புதைத்து விட்டு ரவிச்சந்திரன் தலைமறைவானார். நேற்று மதியம் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் தினேஷை கொன்றேன்’என்று வாக்குமூலம் அளித்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் தாசில்தார் பவானி முன்னிலையில், சிறுவாக்கம் ஏரிக்கரையில் புதைக்கப்பட்ட தினேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.