சென்னை: நந்தனம் அருகே அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் நிர்மல் கைத்தியா. இவரது மகன் அக்ஷய் கைத்தியா (24), நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தனது சகோதரருடன் விலை உயர்ந்த சொகுசு காரில் நுங்கம்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். நந்தனம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் கார் வேகமாக சென்றதால், தறிகெட்டு ஓடி நடைபாதையை தாண்டி, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், காரில் இருந்தவர்களை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காரை பறிமுதல் செய்து, மது போதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.