சென்னை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் தமிழ் மொழியை எளிமையாக கற்கும் வகையில் முனைவர் கனகலட்சுமி எழுதிய 5 நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.
இடைநிலை ஆசிரியை முனைவர் மு.கனகலட்சுமி எழுதிய தமிழ் வேர் மழலையர் பள்ளி நிலை -1, தமிழ் முதல் எழுத்துகள் மழலையர் பள்ளி நிலை-2, தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் மாணவர் கையேடு, தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர், பெற்றோர் கையேடு மற்றும் தமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள். கனகலட்சுமி எழுதிய தமிழ் வேர் மழலையர் பள்ளி நிலை-1 மற்றும் தமிழ் முதல் எழுத்துகள் மழலையர் பள்ளி நிலை-2 ஆகிய நூல்கள் அடிப்படைக் கற்றல் திறன்களை முறையாக வளர்ப்பதற்காக எழுதப்பட்ட நூல்களாகும்.
தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் மாணவர் கையேடு மற்றும் தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு ஆகிய நூல்கள் ஒலி, வரி வடிவப் பெயர்கள், முதல் எழுத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியரின் விதியான எழுத்து, சொல், பொருள் எனும் அடிப்படைக் கூற்றின்படி ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டவையாகும். தமிழ் கையெழுத்துப் பயிற்சிக் கையேடு, தாய்மொழியை அழகாக முறையாக எழுதுவதற்கு 5 கோடுகள் போட்ட ஏட்டில் ஒவ்வொரு எழுத்தையும் எந்த இடத்தில் எந்த அளவு சுழிக்க, மடக்க, முடிக்க வேண்டும் எனத் தெளிவாக எழுத்துகளை எழுதிப் பழகுவதற்காக எழுதப்பட்ட நூலாகும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.