பூந்தமல்லி: வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விபாதிபால்(42). இவர் குடும்பத்துடன் திருவேற்காடு அடுத்த வட நூம்பல் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்கிறார். இவரது 3 வயது மகள் சுனாலிபால்(3). நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை தேடியபோது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி மயக்க நிலையில் இருந்தது. உடனடியாக
குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.