நாக்பூர்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவருடைய மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு எதிராக டிவிட்டரில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கைது செய்யப்பட்டவரின் பெயர் சமீத் தக்கர். இவர் நாக்பூரை சேர்ந்தவர். சமீத் தக்கர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர். இவர் டிவிட்டரில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமைச்சர் ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமீத் தக்கர் அக்டோபர் மாதம் 5ம் தேதி மும்பையில் உள்ள வி.பி.ரோடு போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அவர் தனது லாப்டாப்பையும் செல்போனையும் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் சமீத் தக்கர் கோர்ட் உத்தரவுப்படி, போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. லாப்டாப்பையும், செல்போனையும் ஒப்படைக்கவில்லை. மாறாக தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து மும்பை போலீசார் அவரை தேடினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாக்பூரில் சமீத் தக்கர் கைது செய்யப்பட்டார். நாக்பூர் போலீசாரின் உதவியோடும் அவரை கைது செய்த மும்பை போலீசார், சமீத் தக்கரை மும்பை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்வருக்கு எதிராகவும் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவுக்கு எதிராகவும் டிவிட்டரில் பதிவிட்ட சமீத் தக்கருக்கு எதிராக நாக்பூரில் உள்ள சீத்தாபுல்டி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.