சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) கூறியுள்ளதாவது: தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) 2020-21ம் கல்வியாண்டில் பொறியியல் (இன்ஜினியரிங்) கல்வி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 1ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆன்லைன் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தற்போது நடத்தி வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். பின்னர் மாணவர் சேர்க்கை குறித்து இறுதி நிலவரம் தெரியவரும். இந்த நிலையில் , டிசம்பர் 1ம் தேதிக்குள் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளதால் தமிழகத்தில் டிசம்பருக்கு முன்பாகவே பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.