சின்னாளபட்டி: செம்பட்டியில் பாழடைந்த பயணிகள் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்க்ள புகார் தெரிவித்துள்ளனர். செம்பட்டியில் உள்ள ஆத்தூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் அலுவலகம் உள்ளது. இதனருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணிகள் விடுதி பாழடைந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இங்கு வரும் சமூகவிரோதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் மது அருந்தும் பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பாழடைந்த அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக சமூக விரோதிகளால் அப்பகுதியில் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து செம்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜசேகர் கூறுகையில், ‘பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவது தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் வராததால் கட்டிடத்தை அப்புறப்படுத்த முடியவில்லை’ என்றார்.