×

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ டெபாசிட் இழக்கும்: நலவாரியத்தலைவர் பொன்குமார் பேட்டி

 

நாகர்கோவில், ஏப்.15: தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கம்,விவசாயிகள் தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெல்சியன் தலைமை வகித்தார். செயலாளர் மரியஸ்டீபன் வரவேற்றார்.  கூட்டத்தில் மாநில தலைவரும், தமிழ்நாடு அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நல வாரியம் மூலமாக ரூ.1720 கோடி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய், பணியில் இறத்தால் 5 லட்சம் ரூபாய், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை, 60 வயதுக்கு மேல் பென்சன் என பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை எல்லாம் தொழிலாளர்களிடம் எடுத்துக்கூறி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திண்ணை பிரசாரம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறோம்.

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோருக்கு ஆதரவாக தொழிலாளர்களை சந்தித்து திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் அமோக வெற்றிப்பெறுவார்கள். 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிப்பெறும். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு 3வது இடம் அரிதாக கிடைக்கும். பல இடங்களில் டெபாசிட் இழக்கும். ஒன்றிய அரசு 10 ஆண்டுகாலமாக கார்பரேட்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும், ஆட்சி நடத்தியது.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கிறது. மக்கள் பேசாத சமஸ்கிருதத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கியது. ஆனால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பேசும் தமிழ்மொழிக்கு பணம் ஒதுக்கவில்லை. பா.ஜனதா கட்சி அகில இந்திய அளவில் தோல்வி அடையும். 200 இடங்களில் கூட வெற்றி பெறாது. இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றும். இழந்த உரிமைகள் மீட்கப்படும். சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ டெபாசிட் இழக்கும்: நலவாரியத்தலைவர் பொன்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Ponkumar ,Nagercoil ,Tamil Nadu Building Workers Central Union ,Farmers Labor Party ,Belsian ,Mariastephan ,Tamil Nadu Non-Organized Workers ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...