ஆவடி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆவடி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் நகர துணை செயலாளர் ஜி.ஹரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாநகர செயலாளர் எஸ்.மயில்வாகனன் கண்டன உரையாற்றினார். இதில், வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத்திருத்தத்தையும், புதிய கல்வி கொள்கைகளை திரும்ப பெறவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகர செயலாளர்கள் ராமானுஜம், பாட்ஷா நிர்வாகிகள் அம்பிகாபதி, புருஷோத்தமன், கமலம்மாள், மேகலா மற்றும் கட்டிட, ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.