சென்னை: தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜ தலைவர்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தனர். இதனால், அதிமுக - பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். அதற்காக அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள், அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினேன். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.