டெல்லி: இந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று 88-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தேசிய விமானப்படை தினத்தையொட்டி, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதலில் பறந்து சாசகம் செய்தது. அதன்பின்னர் ரபேல் உள்ளிட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. இது பொதுமக்களுக்கு ஆனந்தத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில், தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. விமானப்படை தினத்தையொட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
