புதுடெல்லி: ‘பிரிக்ஸ்’ என்பது உலகின் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் சுருக்கமாகும். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், இந்தாண்டு ரஷ்யா தலைமை பதவியை வைத்துள்ளது. இந்த முறை வரும் நவ. 17ம் தேதி காணொலி மூலம் வருடாந்திர மாநாடு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு குறித்து ஆலோசிக்கப்படும்.
வரும் நவ. 17ம் தேதி காணொலி மூலம் மாநாடு நடக்கவுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மாநாடு பிரேசில் தலைநகரான பிரேசிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்து கொண்டு இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக காணொலி மூலம் மாநாடு நடப்பதால், தலைவர்களின் சந்திப்பு இருக்காது. அதேநேரம், கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக தொடர் பதற்றம் கடந்த மே மாதத்தில் இருந்து நிலவி வருகிறது.
இரு தரப்பிலும் ராணுவ ரீதியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பிரிக்ஸ் மாநாட்டில், முதன்முறையாக இரு தலைவர்களின் காணொலி சந்திப்பு இருக்க வாய்ப்புள்ளதால், எல்லை பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.