புதுடெல்லி: ஊரடங்கால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் (எம்எஸ்எம்இ). கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி மதிப்பிலான, பொருளாதார ஊக்குவிப்பு சலுகை தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. இதில், எம்எஸ்எம்இ-க்களுக்கு பிரத்யேக அறிவிப்புகள் வெளியாகின. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் 5வது ஊரடங்கு தளர்வில், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதாரமாகத் திகழும் தொழில்களை மீட்டெடுக்க மத்திய அரசு உறுதி வழங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ‘ஊரடங்குத் தளர்வுகளும் - தொழில்துறைகளின் நிலையும்’ என்ற தலைப்பில் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது.
இதில், கொரோனாவுக்கு முந்தைய உற்பத்தியில் 50 சதவீதத்தை எட்டியுள்ளதாக, பெரும்பாலான பெரிய தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், பாதி அளவு கூட எட்ட முடியவில்லை என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எம்எஸ்எம்இக்களின் பங்களிப்பு 30 சதவீதம். 12 கோடி வேலை வாய்ப்பை அளிக்கும் இவை, ஏற்றுமதியில் 45 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இவற்றின் நிலை மோசமாக இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.