சென்னை: உபி மாநில மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் இன்று மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாநில அரசுக்குச் சொந்தமான கம்பெனியை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக உபி மாநில மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். மேலும் கைது, சிறை என அனைத்து நடவடிக்கையும் வலுவான ஒற்றுமையோடு எதிர்கொண்டு வருகிறார்கள். தற்போது உத்தரபிரதேச அரசு இவர்களது போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தையும் அழைத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி (இன்று) உபி மாநில மின்வாரிய ஊழியர்கள் பொறியாளர்கள் தங்களுடைய வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் மின் ஊழியர்கள் பொறியாளர்கள் இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். ஒற்றுமையை உணர்த்த இன்று அனைத்து பிரிவு அலுவலகங்கள் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் அனைத்து வட்டங்களிலும், காலை பிரிவு அலுவலகங்களிலும், மதிய உணவு நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களிலும், மற்றும் மதிய உணவு இடைவேளையில் சென்னை தலைமை அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.