கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆஃப் சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் செர்ரி பிளாசம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்த நிலையில் தற்போது செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்கான ஆஃப் சீசன் துவங்கியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருந்ததால், கோடை சீசன் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு, கொடைக்கானலுக்கு இ-பாஸ் அனுமதி பெற்று சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக மலைப்பகுதிகள் முழுவதும் செர்ரி பிளாசம் பூக்கள் பூத்து குலுங்கின்றன. பூத்துக் குலுங்கும் இந்த பூக்களால் மரங்களில் இலைகள், கிளைகள் தெரியாத வண்ணம், அனைவரையும் ஈர்த்து வருகின்றன. இளஞ்சிவப்பு வண்ணத்தில் காண்பதற்கு மிக அழகாக உள்ள இந்த பூக்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘செர்ரி பிளாசம் மரங்களை கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் நகர் பகுதிகளில் அதிகளவில் நட வேண்டும். இப்பூக்கள் பூக்கும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2ம் சீசன் விழாவை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.