நெல்லை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், கோட்டூர் ஜமாஅத் தலைவர் கலீல்ரகுமான் தலைமையில் கட்சியினர் பாளை மண்டல உதவி கமிஷனரிடம் அளித்த மனு: பாளை கோட்டூர் சாலை வழியாக படப்பக்குறிச்சி, பொட்டல், மணப்படைவீடு, திம்மராஜபுரம் பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணிக்கின்றனர். சாலையின் ஒருபுறம் வயல் வெளிகளும், மறுபுறம் கால்வாயும் காணப்படுகிறது. சில நாட்களாக சாலையின் இருபுறமும் பாலீதின் பைகள், துணிகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அவற்றை தீயிட்டு கொளுத்திவிட்டும் செல்கின்றனர்.
இதனால் அச்சாலை குப்பைமயமாகவும், புகைமூட்டமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் கோட்டூர் சாலையில் போதிய மின்விளக்குகளும் இல்லை. இரவு நேரங்களில் செல்வோர் போதிய வெளிச்சம் இல்லாமல் திண்டாடுகின்றனர். எனவே அங்குள்ள குப்பைகளை அகற்றி, போதிய மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தமஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் காஜா இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.