×

கல்வராயன்மலையில் தொடர் மழை கோமுகி அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னசேலம்: கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென 42 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தாலும்  கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே நீரை சேமித்து வைக்கின்றனர். மேலும் அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு  கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது.  இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே  செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு சென்று அதன்மூலம் 5860  ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய பாசன கால்வாய் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக குறைந்த நீருடன் காணப்பட்ட கோமுகி அணை 37 அடியாக  உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, கல்பொடை  ஆறுகளில் இருந்து அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 42 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது கல்வராயன்மலையில் மழை பெய்து வருவதாலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதாலும், அணையின் நீர் மட்டம் மேலும் உயர  வாய்ப்பு இருப்பதால் கரைகளின் பாதுகாப்பு கருதி அணையை திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும்  சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Kalwarayanmalai Gomuki Dam , Continued ,rains, Kalwarayanmalai ,Gomuki
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது