சென்னை: கொரோனா தொடர்பான நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு புதிய அவசர சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு கடந்த வாரம் தமிழக ஆளுநர் அனுமதி அளித்தார். இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அபராதம் விதிப்பது மற்றும் இதை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றிக்கை அனுப்பி இருந்தார். இதன்படி சுகாதார மற்றும் உள்ளாட்சி துறையில் சுகாதார ஆய்வாளர், காவல் துறையில் உதவி ஆய்வாளர், வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அபராதம் விதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி புதிய அபராத் தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனிமேல் புதிய விதிகளின்படி அபராதம் விசூலிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.