நாகர்கோவில்: வேப்பமூடு ராமசாமி ஐயர் நினைவு பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், குளிர் பதன வணிக நிறுவனங்கள், மதுபான கூடங்கள், வழிபாட்டுதலங்கள், பூங்காக்கள் அதிக பொதுமக்கள் கூடும் இடங்கள் படிப்படியாக மூடப்பட்டன. இதன்படி நாகர்கோவில் மாநகராட்சியிலும், அதிக மக்கள் வந்து செல்லும் வேப்பமூடு பூங்கா மூடப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவித்தது. இதனை மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மக்கள் மாவட்டங்கள் இடையே செல்வதை இ பாஸ் மூலம் தடுக்க கூடாது. கட்டுபாடு பகுதிகள் நீங்கலாக இதர இடங்களில் ஊரடங்கை மத்திய அரசு அனுமதியின்றி அறிவிக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, தமிழகத்திலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த வாரம் வேப்பமூடு ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்த மட்டும் அனுமதிக்கப்பட்டது. நேற்று முதல் பூங்காக்கள் திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று காலை வேப்பமூடு பூங்கா திறக்கப்பட்டது. அங்கு வந்த மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தலுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
6 மாதங்களுக்கு பின்னர் வேப்ப மூடு பூங்கா திறக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் திரண்டு வந்தனர். ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர். அதே போல் முதல் நாளே வழக்கம் போல் காதல் ஜோடிகளும் பூங்காவில் மடி மீது தலை சாய்த்து, கொஞ்சிய காட்சிகளும் அரங்கேறின. 6 மாதங்களுக்கு பின்னர் நேற்று முற்றிலுமாக இயல்பு நிலை திரும்பியது.