×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்புவார்கள்: கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “எதிர் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “சூழலியலைத் தகர்க்கும் சட்டம்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 குறித்த கருத்தரங்கம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், சூழலியல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இவர்களோடு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக செய்தித்தொடர்பாளர்களும் இந்தக் காணொலி நிகழ்வில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: போபால் விஷவாயு கசிவால் கொத்துக்கொத்தாக மனிதர்கள் மரணம் அடைந்ததை நாம் இன்னும் மறக்கவில்லை. 1986ம் ஆண்டு-சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், அதனால் தான் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் 2006-ம் ஆண்டு மேலும் கடுமையாக்கப்பட்டது.
தொழிற்சாலைகள்-திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றும்-ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுற்றுச்சூழல் அறிக்கை தர வேண்டும் என்றும்-பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும்-பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தரலாம்-என்றெல்லாம் 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்தது.

ஆனால்  தற்போது வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் வரைவுச் சட்டத்தில் இவை அனைத்தையும் நீக்கி விட்டார்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை தாக்கல் செய்யவேண்டிய சுற்றுச்சூழல் அறிக்கையை ஆண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்தால் போதும் என்றும், ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ தொடங்கி விட்டு அதன் பின்னர் கூட அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்றும், விதிமீறல் இருக்குமானால் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே புகார் தர முடியும் என்றும், இப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். சுற்றுச்சூழலை இதைவிட யாரும் கொச்சைப்படுத்தமுடியாது.

இதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல் அனுமதிச் சட்டத்தையே மொத்தமாக ரத்து செய்துவிடலாமே என்பதுதான் என்னுடைய கேள்வி. இப்போது போட்டுள்ள சட்டத்தின்படி சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு யார் அனுமதியும் தேவையில்லை. தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது.

சுற்றுச்சூழல் தாக்க வரைவுச் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால்-
1. இது தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கிறது.  இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் குறுக்கீடு இல்லாமல் நமது இயற்கை வளங்களைச் சுரண்டும்.
2.அரசு நிர்வாகத்தின் தலையீடு குறைந்து தனியார் தங்கள் விருப்பம் போல தடையில்லாமல் செயல்படும் நிலை ஏற்படும்.
 3.ஏதாவது விதிமீறல்கள் இருந்தால் அதுகுறித்து புகார் கொடுக்க அரசு அதிகாரிகளுக்கும், திட்ட ஆதரவாளர்களுக்கும் மட்டுமே உரிமை உண்டு. பொதுமக்களுக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
4.எந்தச் சுற்றுச்சூழல் தாக்க வரைவாக இருந்தாலும் அது பொதுமக்கள் கருத்து கேட்புக்கு வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதோடு; அதனை ஆராய்ந்து பார்த்தும் முடிவெடுக்க ஏதுவாக இருக்கும்.
 5.மாநிலச் சுற்றுச்சூழல் அதிகாரிகளை மத்திய அரசு நியமிப்பது மத்திய அரசே முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாகும். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை. சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் மாநில அரசின் அனுமதி பெற்றே நடக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
6.  இந்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது.     இந்தச் சட்டம் அமலானால் மத்திய-மாநில அரசுகள் கொண்டுவர நினைக்கும் மக்கள் விரோதத் திட்டங்கள் எதையும் நாம் கேள்வி கேட்க முடியாது. ஹைட்ரோகார்பன், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், நியூட்ரினோ போன்றவை குறித்து மக்கள் கேள்வி கேட்க முடியாது. இந்தத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மக்களின் போராட்டமும் - தியாகமும் அர்த்தமற்றதாகிவிடும்.

இதுவரை மத்திய அரசு கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களுக்கு எதிராகவும் மாநில அரசு மவுனமாக இருந்தது. அதேபோலத் தான் இப்போதும் இருக்கிறது. அதிமுக அரசின் இந்தச் செய்கை தவறானது; மக்களுக்கு எதிரானது; நாட்டின் எதிர்காலத்துக்கு எதிரானது. ஆனால் திமுக இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து கொண்டுவரக்கூடிய திட்டங்களில் சூழல் மீதான தாக்கத்தை ஆய்வு செய்து, சூழலுக்கு கேடு விளைவிக்குமானால் நிச்சயமாக அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் கோரிக்கைகள் என்ன என்றால்- நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் சட்டவரைவு வைக்கப்பட்டு இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக நமது திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கும், சூழலுக்கும் ஏதுவாக கொள்கைகளை வகுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Environmental Impact Assessment ,MPs ,MK Stalin ,session ,DMK ,seminar ,speech ,draft , Environmental Impact Assessment Draft Notice, DMK MPs, MK Stalin
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...