×

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சம்மன்: வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

சென்னை: சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரவுடி சங்கரை கஞ்சா வழக்கில் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து, அதனை எடுத்து செல்லும்போது திடீரென ரவுடி சங்கர் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதலில் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அதில், ரவுடி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதுதொடர்பாக தமிழக அரசு பதிலளித்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அயனாவரத்தில் இந்த வழக்கானது 176 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு விசாரணையானது தொடங்கியுள்ளது.

இந்நிலையில், என்கவுண்டர் வழக்கில் காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கீழ்பாக்கம் உதவி ஆணையர் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.


Tags : Natarajan ,Rowdy Shankar ,Chennai , Chennai, Rowdy Shankar, Encounter, Police Inspector, Summon
× RELATED சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர...