ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்(43), இவர் அமமுக மாதனூர் ஒன்றிய பிரதிநிதி. இவருக்கு ஜெயந்தி(35) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஜெயந்தி ஆம்பூர் அடுத்த சோலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி அதே பகுதியில் பாலாற்றிற்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தரைப்பாலத்தின் கீழ் ரமேஷ் சடலமாக கிடந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். தலையில் வெட்டு காயங்களூடன் இறந்து கிடந்த ரமேஷின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்படி, நர்சாக பணிபுரிந்து வந்த அவரது மனைவி ஜெயந்தி, மாமியாரான ஓய்வு பெற்ற ஆம்பூர் அரசு மருத்துவமனை ஊழியர் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் சிலரிடமும், அப்பகுதியை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சரஸ்வதி, ஜெயந்தி மற்றும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து ரமேஷை கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ஆம்பூர் அடுத்த மிட்டாளத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கவுதம் (20), வெங்கடசமுத்திரம் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனுஷ்ராஜ்(23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கூலிப்படை ஏவி கணவரை கொலை செய்ததாக வழக்குப்பதிந்து ரமேஷின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகியோரையும் போலீசார் கைது செய்து நேற்று மாலை வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.
கூலிப்படையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமன்(32), வேன் டிரைவர் விக்னேஷ்(26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதமே கார் விபத்து ஏற்படுத்தி ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. கொலையான ரமேஷின் மாமியார் அளித்த வாக்குமூலத்தில், ரமேஷ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்வதில்லை. குடித்துவிட்டு எனது மகளை அடித்து கொடுமை படுத்துவார். அவரது சம்பள பணத்தையும் எடுத்துக்கொள்வார். செல்போன் அழைப்பு வந்தாலும் சந்தேகம் ஏற்பட்டு ஆபாச வார்த்தையில் பேசுவார். குடிபோதையில் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார். இதனால் அவரை கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.