தேவதானப்பட்டி: ‘எங்க பொழப்பு வடிவேலு காமெடி போல ஆகிடிச்சு...’ என காய்கறி வண்டிக்காரரிடம் பணம் கேட்டு போலீஸ்காரர் கெஞ்சும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக வரும் சரக்கு வாகனம், சுற்றுலா வாகனம் மற்றும் டூவீலரில் வருபவர்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் கூறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சரக்கு வாகனத்தில் வந்தவரிடம் எஸ்.எஸ்.ஐ பணம் கேட்ட சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், காட்ரோடு சோதனைச் சாவடியில் பணியில் உள்ள ஒரு போலீஸ்காரர், காய்கறி வண்டிக்காரரிடம் பணம் கேட்டு, ‘‘நீங்கள் தராவிட்டால் யார் தருவார்... எங்க பொழப்பு வடிவேலு காமெடி போல ஆகிடுச்சு... பணம் தராவிட்டால் கொஞ்சம் காய்கறியாவது கொடுங்கள்...’’ என கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.