புதுடெல்லி: `கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களை நீட், ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை எழுத இந்திய அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல,’ என்று சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் குரல் கொடுத்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நீட், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில், சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், இன்ஸ்டாகிராமில் நேற்று வெளியிட்ட பதிவில், `ஓராண்டுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளோம் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது டிவிட்டரில், `கொரோனா தொற்று, வெள்ளத்தால் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்திய அரசு மாணவர்களை தேசிய அளவிலான தேர்வுகளை எழுத கட்டாயப்படுத்துவது நியாயமற்றது. தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கிறேன்,’ என கூறியுள்ளார். அத்துடன், `கொரோனா காலத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவையுங்கள் மோடி ஜி’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.