காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி நெருங்கிய வரும் சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து வட்டாட்சியரை முற்றுகையிட்டு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அடுத்துள்ள வாலாஜாபாத் பகுதி அய்யம்பேட்டையில் 16-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யும் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. 3 அடிக்கு மேல் பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என தமிழக அரசின் உத்தரவை அடுத்து, 3 அடிக்கு மேல் சிலை செய்யும் ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, வட்டாட்சி அலுவலர்கள் சீல் வைக்கும் பணியினை தொடங்கினர்.
இந்நிலையில், விநாயகர் சிலை செய்யும் 15 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து ஆலைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர், காவல்துறையினரை முற்றுகையிட்டு கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதித்து முதலமைச்சர் எடப்படி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.