×

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி-யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூ-வில் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் கவலையடைந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி. நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி.க்காக ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தற்போது ஐ.சி.யூ-வில் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



Tags : SBP ,hospital ,Corona ,SPB , Corona, S.P.B
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...