சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பிபி பூரண குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74) அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 14ம் தேதி திடீரென்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: நேற்று 3வது தளம் ஐசியூவில் இருந்து 6வது தளத்தில் இருக்கும் தனிப்பட்ட ஐசியூவுக்கு எனது தந்தை எஸ்.பி.பி மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்களிடம் தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி, அவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றாலும், முன்பை விட இப்போது சற்று மூச்சு விடுகிறார். முழுமையாக குணமடைய நீண்ட நாட்களாகும் என்றாலும், 100 சதவிகித நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
எஸ்.பி.பி முழுமையான மயக்கத்தில் இல்லை. அவரால் பிறரை அடையாளம் காண முடிகிறது. அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வோம். எனது தாயார் சாவித்திரி தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்து நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். விரைவில் எனது தந்தையும் வீடு திரும்புவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கண்டத்தை தாண்டிவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன். thank you என்று பதிவிட்டுள்ளார்.