சென்னை: தினசரி வேலைக்கு வருவதற்கு மின்சார ரயில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஊழியர் காங்கிரஸ் சார்பில் மின்வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: கோவிட்-19 பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே ஊழியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பணிக்கு வர மின்சார ரயில் வசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.இந்த ரயில்கள் அரக்கோணம்-சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் பயணிப்பதற்கு அனுமதியில்லை. இதனால் ஏராளமான ஊழியர்கள் கூடுதல் செலவு செய்து ஆட்டோ, கால்டாக்சி, வேன் போன்றவற்றில் பணிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. மற்ற பணியாளர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு வருகின்றனர். அப்போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மின்சார ரயில் வசதியை ஊழியர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.