×

புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு நன்றி: மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து  வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக எதிர்க்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் முதல்வர்  பழனிசாமிக்கு கடிதம் எழுதினர்.

இதற்கிடையே, புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும்  உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றப்படும்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என , தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு நன்றி!. மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன்  கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!, என கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,MK Stalin , New Education Policy, Trilingual Plan, Chief Minister Palanisamy, MK Stalin
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...