ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகம் 94.4 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டது. இங்கு பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று, திருமணம் பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கட்டித்தில், போதிய இடவசதி இல்லை. இடநெருக்கடியால், ஆவணங்களை பராமரிப்பதிலும் சிக்கல் இருந்தது. இதனையடுத்து, சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூரில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட இடஒதுக்கீடு செய்து, 94.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த புதிய அலுவலகத்தில் சார்பதிவாளர் அறை, காத்திருப்போர் அறை, கம்ப்யூட்டர் அறை, பதிவு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்பட பல வசதிகள் உள்ளன.
புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சிங்கிலிபாடி ராமசந்திரன், எறையூர் முனுசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.