சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே வனப்பகுதியில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 4 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட சுஜ்ஜல் குட்டை பகுதியில் சிலர் மான் கறி சமைத்து சாப்பிட்டனர். இத்தகவலறிந்த பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது நாய் வேட்டையாடி உயிரிழந்த புள்ளிமானின் கறியை எடுத்து சமைத்துச் சாப்பிட சுஜ்ஜல்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமர் (35), அருள்குமார் (18), திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (20), தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த சார்லஸ் (38) ஆகிய 4 பேரை வனத்துறையினர் பிடித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மான்கறி சமைத்து சாப்பிட்ட அவர்கள் 4 பேருக்கும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.