சென்னை: அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெற்று படிக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதாகவும் அதனால் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், எந்தெந்த பள்ளியில், எந்தெந்த ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றிருக்கிறார்கள்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஆசிரியர்கள் உயர்கல்வி படித்ததற்கான காரணங்கள்? மேலும் அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் என பள்ளி வாரியாக முழுமையான அறிக்கை தயாரித்து வட்டார கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர்கள் உயர்கல்வி படிக்கும் போது அந்த முழுமையான அறிவு மாணவர்களுக்கு உபயோகப்படுமே தவிர, இதில் ஒழுங்கு ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் என்ன? என்று ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்கல்வி படிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு அரசு தரப்பில் இருந்து ஊக்கத்தொகை அளிக்கப்படும். எனவே இந்த ஊக்கத்தொகையை தவிர்ப்பதற்காகவும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.