உயர்கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கல்வி கடன் ஆகும். பட்டப்படிப்பு, முநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர்கல்வியை பயிலவும் கல்வி கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்வி கடன் வழங்கப்படும். சில கல்வி நிறுவனங்கள் ஒரு சில வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும்போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்வி கடன் எளிதாக வழங்கப்படும்.
உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்வி கடன் வழங்கப்படும். கடன் பெற விரும்பும் மாணவர்கள் வங்கிகள் கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேகரித்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்ப சொத்து, மாணவரின் பாடப்பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள். மாணவர்கள் பெறும் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் தொகை இருந்தால், குறைந்தபட்ச வட்டி தொகையுடன், ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகித கணக்கீடு வங்கிக்கு, வங்கி மாறுதலுக்கு உரியது.
ஒருசில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒருசில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன. கல்வி கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையை பொறுத்து அமையும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. இந்த கடன் தொகையை படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஓராண்டிற்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக்கூடாது. மேலும், 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.
* கல்விக்கடன் பெற தேவையான ஆவணம்
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான ஆவணங்களை கேட்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரின் புகைப்படம். மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமான சான்றிதழ் கல்வி கடனுக்கு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பின் அதன் அரசு மதிப்பு சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர் அல்லது அவரின் பெற்றோர் அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரின் கடந்த 6 மாதத்திற்கான வங்கி கணக்கு அறிக்கை. வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமான கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாமல் வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பு உள்ளது. அதனையும் மாணவர்கள் அளிக்க வேண்டியிருக்கும்.
* தினந்தோறும் கல்வி
தேர்வு காலத்தில் மட்டுமே விழுந்து விழுந்து படிக்கிறோம். ஒவ்வொரு நாளும் கல்வியில் ஜெயிப்பதற்கான பழக்கங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால்? வாழ்வில் வெற்றி நிச்சயம் நம் விலாசம் தேடுவது உறுதி... இதோ மாணவர்கள் வாசிக்கவும், வாழ்வில் கடைபிடித்திடவும் வழிமுறைகள்..
* பள்ளி, கல்லூரி பாடங்களை மாணவர்கள் மாதங்கள், வாரங்கள் நாட்கள் மற்றும் மணி என காலத்தைப் பக்குவமாக பிரித்துப் படிக்கலாம். காலை எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை நீங்களே உங்களுக்கான கால அட்டவணையைத் தயாரித்து அதனைக் கட்டாயமாகக் கடைபிடியுங்கள்.
* படிக்கும் போது காற்றோட்டம் நிறைந்த வெளிச்சம் மிகுந்த அமைதியான சூழல் நிறைந்த கவனத்தைத் திசை திருப்பாத இடத்தை, அல்லது அறையை தேர்ந்தெடுங்கள். நேர விரயம் தடுக்க தாகத்திற்கான குடிநீரை அருகில் வைத்துக் கொள்ளலாம்.
* தினமும் படுக்கப் போவதற்கு முன்பு உங்களது கால அட்டவணை கடைபிடிக்கப்பட்டதா என்பதை ஆத்ம பரிசோதனைச் செய்து, சரிசெய்து கொள்ளுங்கள், விடியற்காலையில் எழுந்து சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு குளியுங்கள்.
* ஒருமணி நேரமோ, கூடுதலாகவோ கடுமையாக கவனம் சிதறாமல் படித்த பிறகு, சரியாக ஐந்து நிமிடம் மனதிற்கு பிடித்த மாதிரி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
* நன்றாக உணவு உட்கொண்டு, உடலிலும், உள்ளத்திலும் உடையிலும் எப்போதும் தூய்மையாக இருந்தால் சாதனை படைக்க முடியும். இப்படி திட்டமிட்டு படித்தால் வளர்ச்சி, வாழ்க்கை உயர்வும் நமக்கு நிச்சயம். அப்புறமென்ன எல்லாமே வெற்றிதான்!
* குழந்தைகளை விளையாட விடுங்க... கல்வித்திறன் அதிகரிக்கும்...
நெதர்லாந்தில் உள்ள வியூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வி திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தது. இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்க வைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதாவது, அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளை கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித்திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளைவிட கல்வித்திறனில் சிறந்து விளங்குவார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், விளையாடும்போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. எனவே, மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால், ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித்திறன் சிறப்பாக இருக்கிறது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.