×

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

சென்னை: நடிகர் அஜீத்குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வீட்டின் அருகே குவிந்தனர், நடிகர் அஜீத்குமார், மனைவி ஷாலினி மற்றும் மகளுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலைஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நடிகர் அஜீத்குமார் படப்பிடிப்பை தவிர்த்து குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது.

அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர், ‘நான் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் முடிந்தால் காப்பாற்றுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் உடனே சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.  அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத்குமார் வீட்டிற்கு சென்றனார்.

நீலாங்கரை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டில் இருந்த அஜீத் குமார் உட்பட  அனைவரையும் பத்திரமாக வெளியேற்றி வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. நடிகர் அஜீத் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கேட்டதும். சென்னை முழுவதிலும் இருந்து அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அஜீத் வீட்டின் அருகே குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

உடனே போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் கும்பலாக ஒன்றாக கூடாதீர்கள் கொரோனா தொற்று ஏற்படும் என்று கூறி அனைவரையும் கட்டுப்படுத்தினர்.  மேலும், நீலாங்கரை  போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் செல்போன் சிக்னல் புதுச்சேரிக்கும்  விழுப்புரத்திற்கு இடையே காட்டியுள்ளது.

பிறகு செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நீலாங்கரை போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீசார் உதவியுடன் நடிகர் அஜீத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறது நேரம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : house ,Ajith ,fans , Actor Ajith, bomb threat, fans
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்