×

ஆம்பூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்: பணியில் இருந்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

ஆம்பூர்: ஆம்பூரில் முழு ஊரடங்கின்போது வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் சந்திரசேகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். இவரது மனைவி நிலா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பிரசன்னா, 3 வயதில் ஜனனி மற்றும் 6 மாத கைக்குழந்தை பிரியதர்ஷினி உள்ளனர். முகிலன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார். அங்கு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகிலனை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகத்திற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள மருந்தகத்திற்கு நடந்து சென்று மருந்து வாங்கலாம். வாகனத்தில் செல்ல அனுமதியில்லை என்று கூறி வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து இல்லாததால் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்வதற்காக வந்ததாக கூறியுள்ளார். மேலும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், வாகனத்தை திருப்பி தருமாறும் போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர் திருப்பித் தர மறுத்துள்ளார். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தை கேட்டு தனியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்த காவலர்கள் லட்சுமணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இடம் முகிலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் வாகனங்கள் திரும்ப வழங்குவது குறித்து தகவல் சொல்லப்படும் என்றும் அப்போது வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வாகன சோதனை நடைபெற்ற இடத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே தீ வைத்துக்கொண்டார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தான் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது. சாலையில் அவர் படுத்துக் கொண்ட நிலையில் அங்கு வந்த வேறொரு வாகனம் மூலம் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி. பிரவீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



Tags : Youth fire incident ,Ambur: Policeman ,guard ,Ambur , Ambur, vehicle confiscation, guard, dismissal
× RELATED பெண் காவலர் பற்றி சர்ச்சையால் கைது...