×

திருவள்ளூர், மதுரை, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: திருவள்ளூர், மதுரை, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தி வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல் , பெரம்பலூர், மதுரை, மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், ஹரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஏற்காடு தானியங்கி மழைமானியில் 20 செ.மீ  மழையும், கீரனூர், அரக்கோணம், டேனிஷ்பேட்டை பகுதிகளில் தலா 13 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், விரிஞ்சிபுரம், செய்யூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தலா 12 செ.மீ, சென்னை விமான நிலையம், ஆலந்தூர், புதுக்கோட்டை, பெருங்கலூர் பகுதிகளில் தலா 11 செ.மீ  மழை பதிவாகியுள்ளது. மேலும், அண்ணா பல்கலை, காட்பாடி, ஆர்.கே.பேட் பகுதிகளில் தலா 10 செ.மீ, மஹாபலிபுரம், மேலாளத்தூர், திருக்கழுக்குன்றம், பள்ளிப்பட்டு, திருத்தணி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தலா 9 செ.மீ  மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூலை 10ம்(இன்று) தேதி, வடக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் கடலோர கர்நாடக, லட்சதீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 10 முதல் 14ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜுலுவுய் 13 மற்றும் 14ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai ,Salem Northern Districts ,rainstorms ,Tiruvallur , Tamil Nadu, Pondicherry, Rain, Chennai Meteorological Center
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை