சென்னை: பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்சிஏ படிப்பின் காலம் 3 ஆண்டு என்பதை 2 ஆண்டுகளாக குறைத்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு அனுமதி பெற்ற பல்கலைக் கழகங்கள், அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பிசிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் எம்சிஏ படிப்பு 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படிப்புக்கான காலத்தை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இது குறித்து பல்கலைக் கழக மானியக் குழு, ஏஐசிடிஇ ஆகியவை பரிசீலித்து வந்தன. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பல்கலைக் கழக மானியக் குழுவின் 545வது கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி 2020-2021ம் கல்வி ஆண்டில் எம்சிஏ படிப்புக்கான காலம் 2 ஆண்டுகளாக குறைக்கலாம் என்ற முடிவு ஏற்கப்பட்டது. இதை ஏஐசிடிஇ ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை ஏஐசிடிஇ அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.