திருப்போரூர்: திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை திருப்போரூரில் கடைகள் அடைக்கப்பட்டன. இதை பயன்படுத்தி சிலர் திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் முன்பு தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தற்காலிக கடைகளை நிரந்தர கட்டிடங்களாக மாற்றுவதாக திருப்போரூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றி, அங்கிருந்த பொருட்களை லாரிகள் மூலம் எடுத்துச் சென்றனர்.