காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பியாக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் சரகத்தில் ரவுடிகளை ஒடுக்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரவுடிகளும் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்காக தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பொதுமக்கள் குற்றம் சார்ந்த தகவல்களையும் தேவையான உதவிகளையும் கேட்டு பெறுவதற்காக 2 சிறப்பு தொலைபேசி எண்கள் 7397001493 மற்றும் 7397001398 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 3 மாவட்டங்களிலும் காவல் மாணவர் படை, போலீஸ் நண்பர்கள் குழு ஆகியவை விரிவுபடுத்தப்பட்டு, அதன்மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வது தடுக்கப்படும். 3 மாவட்டங்களிலும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது முடக்கம் காரணமாக திருமணம், இறுதி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டம் சேர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். காஞ்சிபுரத்தில் 31, செங்கல்பட்டில் 20, திருவள்ளூரில் 23 என மொத்தம் 74 பேர் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் போராட்டங்களின் போது விதிகளை மீறியதாக 85,758 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 71,206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.