சென்னை: ஓய்வு வழங்காமல் தொடர்ந்து பணியாற்ற வைப்பதாக கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சரி செய்ய பல மாவட்டங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் சென்னையில் பணிக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை 21 நாட்கள் மட்டும் பணிசெய்தால் போதும், 6 நாட்கள் விடுமுறை எனக் கூறி அழைத்து வந்து விட்டு தேவையான உணவு மற்றும் முறையான ஊதியம் மற்றும் ஓய்வு வழங்காமல் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.