சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல் என பல்வேறு பணிகளை உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு மக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். நேர்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம் தான் இந்த களங்கம் துடைக்கப்படும்.