ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நீர்பாசன ஏரிகளில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதகு, கலங்கல், கரை, வரவுக் கால்வாய் ஆகியவை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதையொட்டி, பெரும்புதூர் ஒன்றியம் குண்டுபெரும்பேடு 89.26 லட்சம், கொளத்தூர் 47.64 லட்சம், அக்கமாபுரம் 57.61 லட்சம், வடமங்கலம் 52.59 லட்சம், காந்தூர் 49.66 லட்சம், எறையூர் 39.07 லட்சம், ஏகனாபுரம் 44.65 லட்சம், வெங்காடு 43.67 லட்சத்தில் என ஏரிகளில் மதகு, கலங்கல், கரை, வரவுக் கால்வாய் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வடமங்கலம், கொளத்தூர் ஏரி சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறை நீர்வள மேலாண் இயக்குனர் சத்தியகோபால், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலாறு வடிநில திட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், கோவிந்தராஜன், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் மார்கண்டேயன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாக செய்ய வேண்டும் என்று விவசாய சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் கொளத்தூர் விவசாய சங்க நிர்வாகிகள் கொளத்தூர் முனுசாமி, வரதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.