புதுடெல்லி: இந்தியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அடுத்த மாத மத்தியில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டும் என ஆய்வுகள் எச்சரித்துள்ளன. உலகிலேயே கொரோனா நோய் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக மிச்சிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பல்கலைக் கழக பேராசிரியர் பரமார் முகர்ஜி கூறுகையில், “நீங்கள் நோய் தொற்றின் உச்சத்தை பார்க்க முடியாது. அதற்கு இன்னும் நேரமெடுக்கும். நான் எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்த நீண்டகால கணிப்பு குறித்த விவரங்களை அகற்றி விட்டேன். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களில் இது மிகவும் கடினமானதாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்றார். இவர் இந்தியாவின் நோய் தொற்றுக்களை உருவகப்படுத்தும் குழுவில் இடம்பெற்றுள்ளார். நோய் தொற்று பரவலின் ஆரம்ப கட்டத்தில், கடந்த மார்ச் இறுதியில் இந்தியா தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியது. இது விவாதத்தை ஏற்படுத்தியது. எனினும் எதிர்பார்த்தப்படி நோய் தொற்று குறையவில்லை. பல தலைவர்கள் கொரோனாவுடன் வாழ பழக வேண்டும் என்றும் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
உண்மையில். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்நிலையில், தினசரி நோய் தொற்றுக்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்த நிலையை இந்தியா எட்டியுள்ளது.
ஜூலை 15ம் தேதி அளவில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டும் என்றும் மிச்சிகன் பல்கலைக் கழகம் தனது ஆய்வு முடிவில் அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்கு காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சுகாதார வசதிகள் இல்லாத பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.