சென்னை : அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு, இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஊரடங்கை ஜூன் 30 வரை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.