உத்திரகாண்ட்: சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக இந்திய ராணுவ தளபதி நராவனே தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே கைகலப்பு நேரிட்டு படைகள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பிலும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சகமும் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த 423 பேருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து பயிற்சி முடிந்தவர்களின் அணிவகுப்பை இந்திய ராணுவ தளபதி நராவனே பார்வையிட்டார்.
இதையடுத்து, பயிற்சி முடித்த இந்தியர்கள் 333 பேரும் ராணுவ பணியில் சேர்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தளபதி நராவனே, சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும், படைப்பிரிவு கமாண்டர்கள் வட்டத்திலும், உள்ளூர் கமாண்டோ வட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவின்படி, இருநாடுகளும் படையினரை பெருமளவு எல்லையில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதனால் எல்லையில் நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதாவும் அவர் தெரிவித்தார்.