சென்னை : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 29 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-லிருந்து 4-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் இருந்து வந்த 29 வயதான வாலிபருக்கு கொரோனா இருந்ததால் கடந்த 28ம் தேதி முதல் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை மூச்சு திணறல் அதிகமான நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் 34 வயது இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கட்டுமான பொறியாளராக பணியாற்றி வந்த அந்த இளைஞர் பொது முடக்கம் காரணமாக தூத்துக்குடியில் இருக்கும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
கடந்த 10ம் தேதி இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மனைவிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.இதனிடையே சென்னையில் 97 வயது முதியவர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாலும் தமிழகத்தில் அடுத்தடுத்து இளைஞர்கள் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.