நெல்லை: வண்ணார்பேட்டையில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் 80 அடி பள்ளத்தை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். பாளை. வண்ணார்பேட்டை 9வது வார்டு திருக்குறிப்பு தொண்டர் தெருவில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக 80 அடி பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனருகே வீடுகளும், பொது கழிப்பிடமும் உள்ளது. இதனால் பள்ளத்தை சுற்றி தகரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீசும் பலத்த காற்றால், பள்ளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தகர தடுப்புகள் கீழே சரிந்து விழுந்தன. தற்போது தடுப்புகள் இன்றி 80 அடி பள்ளம் திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. மேலும் குழிக்குள் பாசிபடர்ந்த தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த குழிக்குள் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கால்நடைகள் தவறி விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் குழியை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.